Vikatan Story - தொடாதே! -



தொடாதே!

குரு அரவிந்தன்





‘பணத்தால் எதையும் வாங்கலாம் என்று ஆணவத்தோடு சொன்னாயே… இப்போ… உன்னால் முடியுமா என்று பார்…!’ )

நன்றி: ஆனந்தவிகடன்



வெற்றிக் களிப்போடு முகத்தைத் துடைத்துக் கொண்டு அந்த டவலை பெண்கள் கூட்டத்தை நோக்கி எறிந்தான் பிரதாப்.. அந்த டவலை எடுப்பதற்கு இளம் ரசிகைகள் போட்டி போட, அவன் டென்னிஸ் கோட்டை விட்டு அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தான். இளமையின் துடிப்பும், ஆண்மையின் அகங்காரமும் அவன் நடையில் தெரிந்தன. அவன் தனது ரசிகைகளுக்கு மிக அருகே வந்து அவர்கள் நீட்டிய ஆட்டோகிராப்பில் கையேழுத்துப் போட்டான். அவனது பரந்த மார்பும், விரிந்த தோள்களும், முகத்தின் வசீகரமும் நிச்சயமாக எந்த ஒரு பெண்ணையும் ஒருமுறை நிமிர்ந்து பார்க்க வைக்கும்.

அவன் தன் அருகே வரும் வரையும் காத்திருந்தாள் ஜாஸ்மின். ரொம்ப நாகரிகமாக அவள் உடை அணிந்து இருந்தாள். தனது ஆட்டோகிராப் நோட்டை அவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கி விரித்துப் பக்கங்களில் பார்வையை ஓடவிட்டான்.

‘யுவர் நேம் ப்ளீஸ்!’

‘ஜாஸ்மின்’ என்றாள் சலங்கை ஒலியில்.

‘ஸ்வீட் நேம்… ஐ லைக் இட்’ என்றவன், அவளின் கண்ணுக்குள் எதையோ தேடிப் பார்த்தான். கண்ணோடு கண்கலக்க…

நாணத்தால் அவள் முகம் குப்பென்று சிவக்க, அவனது காந்த விழிகளைத் தவிர்த்து எங்கேயோ தொலைவில் பார்வையை ஓடவிட்டாள். அவளது மௌனம் அவனை மேலும் பேச வைத்தது.

“ஜாஸ்மின்! வெள்ளையாய், மென்மையாய், சுகந்தமாய் நறு மணம் வீசுமே! அந்த மலர் தானே? அந்த மலர் எனக்கு மிகவும் பிடிக்கும்..!”

“பூவை மட்டும் தானா?” என்றாள் ஜாஸ்மின் ஒரு ரசிகையின் ஏக்கத்தோடு.
அவன் எதுவுமே பேசாமல் புன்னகைத்துக் கொண்டே ஆட்டோகிராப்பில் கையெழுத்தைப் பதித்து அவளிடம் திரும்பவும் நீட்டினான்.

‘இன்று உங்க ஆட்டம் ரொம்ப நன்றாக இருந்தது.’

‘தாங்யூ ஜாஸ்மின்.. நீங்க தினமும் இங்கே வருவீங்களா?’

“ஆமா! உங்க ஆட்டமென்றால் எனக்கு உயிர். நீங்க விளையாடும் டெனிஸ் மாட்ச் எதையுமே மிஸ் பண்ண மாட்டேன்.”

“அப்போ நீங்கள் எனது ‘நம்பர் ஒன்’ ரசிகை! அப்படித்தானே? ஆமா.. நீங்க தனியாவா வந்திருக்கீங்க?’

‘ஆமா’

‘எப்படிப் போவீங்க?’

‘பஸ்ல’ ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.

‘நான் வேணும்னா டிராப் பண்ணட்டுமா?’

‘வேண்டாம்! உங்களுக்கு ஏன் வீண்சிரமம்.’

‘இதிலே என்ன சிரமம்? என்னுடைய ரசிகைக்கு நான் இந்த சின்ன உதவி கூடச் செய்யக்கூடாதா என்ன?’

‘இருங்க ஒரு நிமிடம், வந்திர்றேன்’ என்றபடி சேஞ்சிங் ரூமுக்குள் அவசரமாய்ப் போனான்.

அடுத்த பத்தாவது நிமிடம்… காரின் முன்ஸீட்டில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து போவது அவளுக்குப் பெருமையாக இருந்தது. அவனது ரசிகைகள் எல்லாம் பொறாமையோடு அவளைப் பார்ப்பதாக உள்ளுணர்வு சொல்லிற்று. ஃபைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றுக்குள் கார் நுழைந்த போது அவன், அவளைப் பார்த்துக் கேட்டான்,

“இந்த ஹோட்டலில் தான் டோர்ணமெண்ட் முடியும் வரை தங்கியிருக்கப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ரூமுக்குப் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரட்டுமா?”

அவள் வேறு வழியில்லாமல் தலையசைத்தாள்.

காரை வாசலிலே நிறுத்தி விட்டு,
“காருக்குள்ளே எவ்வளவு நேரம் தனியா உட்காந்திருப்பீங்க.. வாங்க மேலே ரூமிலே இருக்கலாம்!”

காரிலிருந்து இறங்கி அவனோடு நடந்தாள்.

அறையைத் திறந்தவன், இன்டர்காமில் ரூம் சர்வீசைக் கூப்பிட்டு இரண்டு ஐஸ்கிறீம் கொண்டு வரச்சொன்னான்.

அவன் வாஷ் எடுத்து விட்டு பாத்டவலை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வந்த போது அவள் ஐஸ்கிறீமைச் சுவைத்துக் கொண்டிருந்தாள்.

அவன், அவளுக்கு அருகே வந்து,
‘எனக்கு ஒரு ஸ்பூண்’ என்றான் வாயைத் திறந்தபடி.

‘நோ…இது..நான் சாப்பிட்டது…எச்சல்…’ என்று பதறினாள் ஜாஸ்மின்;.
‘பரவாயில்லே…’ அவள் கையைப் பிடித்து ஸ்பூனோடு தனது வாய்க்குள் வைத்தான்.

‘ஹெள ஸ்வீட்…….!”

பேசாமல் காரிலேயே இருந்திருக்கலாம், என்று அவள் சங்கடப்பட்டாள்.

நிமிர்ந்து அவனைப் பார்க்கக் கூச்சப்பட்டுத் தலை குனிந்த படி அவசரமாக ஐஸ்கிறீமைச் சாப்பிட்டாள். அவள் உதட்டிலே ஐஸ்கிறீம் உருகி வழிய, அவன் திடீரெனக் குனிந்து அவள் கன்னங்களைக் கையிலேந்தி, தன் உதடுகளால் அவள் உதடுகளில் வழிந்த ஐஸ்கிறீமைச் சுவைத்தான். எதிர் பாராத அவனது இந்தச் செய்கையால் அவள் நிலை குலைந்து குழம்பிப் போய் அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க முயற்சி செய்தாள்,

‘விடுங்க!…..ப்ளீஸ்’

‘ஐ வாண்ட் திஸ்’ என்றான் உதட்டைக் கவ்வியபடி.

‘வேண்டாம்….ம்….ம்’

‘ஐ லைக் தீஸ் லிப்ஸ்’

‘இருங்க… உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்!’

‘பேசலாமே… அப்புறம்! ஜாஸ்மின் இந்த உதடுகள் பேசுவதற்கல்ல, சுவைப்பதற்கே!” அவன் அவளது உணர்ச்சிகளைப் பொருட்படுத்தாமல் தன் காரியத்தில் இறங்கினான்.

அந்த ஆண்மையின் வேகத்தில், சுழியில் அகப்பட்ட துரும்பாக, எதிர்நீச்சல் போட முடியாமல் அவள், அவனுக்குள் அடங்கிப் போனாள்.

அவன் கண் விழித்த போது அவள் விசும்பிக் கொண்டிருந்தாள்.

அவனிடம் குற்ற உணர்வு இருக்கும் என்று அவள் எதிர்பார்த்தாள்.

ஆனால் அவனோ கசக்கிப் போட்ட ஒரு மலரைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தான். ‘இப்படி எத்தனை பெண்களை நான் அனுபவித் திருக்கிறேன்’ என்கிற அகம்பாவம் அவன் பார்வையில் தெரிந்தது.

அடி வயிற்றில் குமட்டிக் கொண்டு வர, மெல்ல எழுந்து உடைகளைச் சரி செய்தபடி யன்னலுக்கு அருகே சென்று வெளியே எட்டிப் பார்த்தாள்.

அவன் எழுந்து அருகே வந்து இயல்பாக அவளின் தோளில் கையைப் போட்டான். அவள் சட்டென்று தன்னிச்சையாக அவனிடமிருந்து விலகிப் போனாள்.

;உன்னை மறுபடியும் சந்திக்கணும்…’ என்றான் தாபத்தோடு.

எதுவும் பேசாமல் வெளியே வெறித்துப் பார்த்தவள்,
‘கட்டாயம் சந்திக்கணுமா?’ என்றாள்.

‘ஆமாம்! உனது விலாசத்தைச் சொன்னால் நானே வந்து சந்திப்பேன்’
அவள் சொன்னாள். அவன் ஒரு கணம் திகைத்துப் போய் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

‘அது நான் பிறந்த ஊராச்சே!’

‘ஆமா…..ஊராவது ஞாபகமிருக்கிறதே! உங்க வீட்டிற்கு அடுத்த வீட்டிலே இருந்த மலர்விழியை ஞாபகமிருக்கா?

அவன் சிறிது நேரம் சிந்தனையை ஓடவிட்டான்.

‘ஓ… அந்த மலரா நீ?’

‘ஆமாம்! அதே மலர் தான்! பட்டிக்காட்டு மலர் எப்படி ஜாஸ்மீனாய் மாறினாள் என்று பார்க்கிறாயா? பன்னிரண்டு வருஷம் உனக்காகத் தான் காத்திருந்தேன். அறியாப் பருவத்தில் இருந்த என்னை ஆசை வார்த்தைகள் பேசி ஏமாற்றி உன் வலைக்குள் சிக்கவைத்து… உன் பசியைத் தீர்த்துக் கொண்டாய். நியாயம் கேட்ட போது ஊரை விட்டு ஓடிவிட்டாய்.

எங்கெல்லாமோ தேடினேன். நீ அகப்படவில்லை. என்றாவது ஒரு நாள் உன்னைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை காலமும் உயிரோடு இருந்தேன். சென்ற மாதம் பத்திரிகைகளில் எல்லாம் உனது படத்தைப் போட்டு டென்னிஸ் போட்டிக்கு அமெரிக்காவில் இருந்து வரப்போவதாக எழுதி இருந்ததைப் பார்த்தேன். எப்படியாவது உன்னைச் சந்திக்க வேண்டும் என்று தான் இவ்வளவு தூரம் உன்னைத் தேடி வந்தேன். எப்படியோ இன்று என் வலையில் நீ சிக்கிக் கொண்டாய்!’

‘ஹா… ஹா… யார் வலையில் யார் சிக்கியது? கூனிக் குறுகி நிற்கும் அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

‘ஸ்போட்ஸில் உள்ள ஆர்வம் காரணமாய் உன்னைத் தேடி வந்த எத்தனையோ அப்பாவிப் பெண்களை நீ ஏமாற்றி இருக்கிறாய் என்று அறிந்தேன். தயவு செய்து இனி மேலும் தப்பான வழியில் போகாதே, ஆசை காட்டி அவர்களை மோசம் செய்யாதே என்று சொல்லத்தான் உன்னை தேடி இங்கு வந்தேன்.’

‘இப்ப உனக்கு என்ன வேணும்? என்னை பிளாக் மெயில் பண்ணப் போறியா? உனக்குப் பணம் தேவையா?’

அவன் தேவையில்லாமல் பதட்டப் படுவதைப் பார்த்து அவள் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

‘பெயர், புகழ், பணம் இவையெல்லாம் என்ன செய்யும்? எவ்வளவு காலத்திற்கு இவை உன்னோடு நிலைச்சு நிற்கும்?’

‘ஏன்? என்னாலே பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும்!’

‘அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் பலமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் நானிருந்தேன். எனக்கு இரத்தம் அதிகம் சேதமாகிவிட்டது.

அப்போது அவசரத்திற்கு யாரோ இரத்தம் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள். அப்புறம் தான் தெரிய வந்தது அந்த இரத்தத்தில் எயிட்ஸ் கிருமியும் கலந்திருந்தது என்று. காலம் கடந்தபின் எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை! உன்னை எச்சரிப்பதற்காகத்தான் என்னைத் தொடாதே! என்று சொல்ல வாயைத் திறந்தேன்.

ஆனால் நீயோ என்னைப் பேசவே விடவில்லை. பணத்தால் எதையும் வாங்கலாம் என்று ஆணவத்தோடு சொன்னாயே… இப்போ… நீயே தேடிக் கொண்ட எயிட்சுக்கு மாற்று மருந்து உன்னால் வாங்க முடியுமா என்று பார்…!’

அவன் என்ன செய்வது என்று தெரியாமல், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நிற்க, அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

நன்றி: ஆனந்தவிகடன்

*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)

***********************************************************




Comments