பூமியில் விழப்போகும் சோவியத் விண்கலம்
குரு அரவிந்தன்
சோவியத் ஒன்றியத்தால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட விண்கலம் ஒன்று தோல்வியடைந்ததால், மீண்டும் பூமியை நோக்கி அதிவிரைவாக வருவதாகவும், இந்த வார இறுதியில் பூமியில் வந்து விழலாம் என்றும் விண்வெளி நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் அது எந்தப்பகுதியைத் தாக்கப் போகிறது என்பது இன்னும் தெளிவாகக் கணிக்கப்படவில்லை.
காஸ்மோஸ் 482 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் 1972 ஆம் ஆண்டு வீனஸ் என்று சொல்லப்படுகின்ற வெள்ளிக் கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது. அப்போது இரண்டு விண்கலங்கள் ஏவப்பட்டாலும், ஒன்று தோல்வியடைய மற்றது வி71 - 670 வீனஸ் கிரகத்தைச் சென்றடைந்தது. ஆனாலும் வி71 - 671 என்ற இந்த விண்கலம் வீனஸ் பரிமாற்றப் பாதையில் செல்வதற்கு போதுமான வேகத்தை அடையவில்லை என்பதால், பூமியின் சுற்றுப்பாதையை விட்டு அதனால் வெளியேற முடியாமல் பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தது.
இது உடைந்த போது, இரண்டு பெரிய துண்டுகள் பூமியின் உயர்ந்த சுற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டன. அவற்றை விண்வெளிக் குப்பை என்று சொல்வார்கள். அவற்றில் சுமார் 1,100 இறாத்தல் எடையுள்ள ஒரு துண்டுதான் மே மாதம் 10 ஆம் திகதி வரையில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காஸ்மோஸ் 482 தரையில் மோதினால், அது 52 டிகிரி வடக்கு மற்றும் 52 தெற்கு அட்சரேகைகளுக்கு இடையில் பூமியில் விழ வாய்ப்புள்ளது.
பூமியை விட 90 மடங்கு அடர்த்தியான வீனஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைவதற்கு ஏற்றவகையில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டதால், பூமிக்குத் திரும்பும் போது வளிமண்டல உராய்வு காரணமாக எரிந்து போவதற்கான சாத்தியம் மிகக் குறைவானது என்றே கருதுகின்றனர். தற்போது 1.2 மில்லியன் குப்பைகள் விண்வெளியில் இருப்பதாகக் கணித்திருக்கின்றனர். தற்செயலாக உங்கள் பகுதியில் விழுந்தால் அதற்கு அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
காஸ்மோஸ் 482. மே 10, 2025 அன்று பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் இது விழுந்ததால், ஆபத்து தவிர்க்கப்பட்டது.
Comments
Post a Comment